1 அக்., 2012

வாலாஜாவில் ஜீவனாம்சம் கேட்டு மகன்கள் மீது பெற்றோர் வழக்கு: 6 மகன்களும் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

ராணிபேட்டை, அக்.1-வாலாஜாவில் ஜீவனாம்சம் கேட்டு மகன்கள் மீது பெற்றோர் வழக்கு: 6 மகன்களும் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 83) விவசாயி. இவரது மனைவி யசோதம்மாள் (75). இவர்கள் இருவரும் வாலாஜா ஜே.எம்.1 கோர்ட்டில் தங்களது மகன்கள் மீது ஜீவனாம்ச வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்களுக்கு அசோகன், கிருஷ்ணமூர்த்தி, ரங்கநாதன், தயாளன், வேல்முருகன், வரதராஜன் என 6 மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்ததுடன், ஒவ்வொரு மகனுக்கும் தலா ரூ.30 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை சரிசமமாக பிரித்து 2008ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி கொடுத்து விட்டோம்.

இவர்கள் 6 பேரும் திருப்பாற்கடலில் தனித்தனியாக வசதியாக வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொருவரும் மாதம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிக்கின்றனர். கஷ்டப்பட்டு 6 பிள்ளைகளையும் படிக்க வைத்துநல்ல நிலைக்கு அவர்களை உருவாக்கி, சொத்துக்களுடன் வாழ வழிவகை செய்துள்ளோம். ஆனால், பெற்றோரான எங்களை சாப்பாட்டுக்கே வழியின்றி அனாதையாக்கி விட்டனர். எனவே, எங்களுக்கு மாதம் தோறும் ஆகும் மருத்துவச்செலவு, உணவு மற்றும் இதர செலவுகளுக்காக ஒவ்வொருவரும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ஜீவனாம்சமாக வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

இந்த வழக்கை மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் ஸ்ரீதரன் ஆஜராகி தாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட வாலாஜா பேட்டை ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் (பொறுப்பு) அனுசுயா, இந்த வழக்கு தொடர்பாக 6 மகன்களையும் வரும் அக்.5ம் தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
நன்றி மாலைமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக