7 செப்., 2012

ராஜபட்ச இந்தியா வர சுஷ்மா அழைக்கவில்லை: பொன். ராதாகிருஷ்ணன்



சென்னை, செப். 5: மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள புத்தமத கல்வி மைய அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருமாறு இலங்கை அதிபர் ராஜபட்சவை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் அழைக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுதான் ராஜபட்சவுக்கு அழைப்பு விடுத்துள்ளது என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் தீவிரமடையத் தொடங்கிய 2008-ம் ஆண்டு முதல் இலங்கை அரசையும், அதற்கு துணைபோன மத்திய காங்கிரஸ் அரசையும் தமிழக பாஜக கடுமையாக எதிர்த்து வருகிறது. 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சி அமைத்தால் ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தமிழர்கள் போரை முன்னெடுத்துச் சென்றனர்.

பாஜக மீது இலங்கைத் தமிழர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதைக் கண்டித்து பாஜக தொடர்ந்து போராடி வருகிறது. வேதாரண்யத்துக்கு நேரில் சென்று இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு சுஷ்மா ஸ்வராஜ் ஆறுதல் கூறினார்.

அவர்தான் இந்தப் பிரச்னையை மக்களவையில் எழுப்பினார். இலங்கைக் கடற்படையின் செயலைக் கண்டித்து தில்லியில் மக்களைத் திரட்டி தெருவில் இறங்கி போராடிய தேசியத் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மட்டுமே.

மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சியில் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறவுள்ள புத்தமத கல்வி மைய அடிக்கல் நாட்டு விழாவுக்கு பூடான் பிரதமர், இலங்கை அதிபர் உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்களை மத்திய அரசுதான் அழைத்துள்ளது.

2009-ல் நடைபெற்ற இனப்படுகொலைக்குப் பிறகு இந்தியாவில் எங்கும் ராஜபட்சவை அனுமதிக்கக் கூடாது என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. ஆனாலும், சுஷ்மா ஸ்வராஜ்தான் ராஜபட்சவை அழைத்தார் என திட்டமிட்டு செய்திகளை பரப்பி வருகின்றனர்.

இது குறித்து தொலைபேசியில் சுஷ்மாவிடம் பேசியபோது, ராஜபட்சவை தான் அழைக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். வெளிநாட்டுத் தலைவர்களை அழைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் உள்ளது என்பது தெரிந்தும் பாஜக மீது குற்றம்சாட்டுவது கண்டனத்துக்குரியது என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நன்றி தினமணி ...

முதலில் அண்டை மாநிலத்தில் சொல்லி தண்ணீர் விட சொல்லுங்கள் 
உங்கள் தமிழ் பற்றுக்கு சான்றாய் அமையட்டுமே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக