3 செப்., 2012

பாராளுமன்ற முடக்கம் ; தினமும் 2 கோடி வீணாகிறது ...



பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 8-ந் தேதி தொடங்கியது. வரும் 7-ந் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஏற்பட்ட முறைகேடுகளால் நாட்டுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதற்கு பொறுப்பு ஏற்று பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி தினமும் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டது. இதனால் பாராளுமன்றம் முடங்கியது.
8,9,16,17-ந் தேதிகளில் 4 நாட்கள் தவிர மற்ற நாட்களில் பாராளுமன்ற அலுவல்கள் முழுமையாக நடைபெறவில்லை. அந்த வகையில் மக்களவையில் 50 சதவீத அலுவல் நடக்க வில்லை. பாராளுமன்றத்தில் ஒரு நாள் அலுவலை நடத்தி முடிக்க வேண்டுமானால் ரூ.2 கோடி செலவாகும்.
பாராளுமன்ற முடக்கம் காரணமாக தினமும் ரூ.2 கோடி வரிப்பணம் வீணாகியது. தற்போதைய நிலவரப்படி 10 நாட்கள் மக்களவை, மாநிலங்களவையில் சிறு பணி கூட நடக்கவில்லை. இதற்கு மட்டும் ரூ.20 கோடி வீணாகி விட்டது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடிய இன்னும் 4 நாட்களே உள்ளன. இந்த நாட்களிலும் பாராளுமன்றம் முடங்கினால் மக்கள் வரிப்பணம் மேலும் வீணாகும் நிலை உள்ளது.

நன்றி நக்கீரன் 

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் அமளிக்கிடையே பெண்கள் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்
புதுடெல்லி, செப். 3-

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பெருமளவில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, பாராளுமன்றத்தில் பாரதீய ஜனதா உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் பதவி விலகும் வரை போராட்டம் நடத்த விடமாட்டோம் என்று முட்டுக்கட்டை போட்டு வருவதால், பாராளுமன்றத்தின் பணிகள் 9-வது நாளாக இன்றும் முடங்கியது. இனி வரும் நாட்களிலும் இதே நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கிடப்பில் உள்ள முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் இழுபறி ஏற்பட்டது. ஆனால் அதற்கு முடிவு கட்டும் வகையில் இன்று, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் 3 முக்கிய மசோதாக்கள் விவாதம் எதுவும் இன்றி நிறைவேற்றப்பட்டன.

வேலை செய்யும் இடங்களில் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலான பெண்கள் பாதுகாப்பு சட்ட மசோதாவை, அமைச்சர் கிருஷ்ணா தீரத் நிறைவேற்றினார்.

இந்த சட்டத்தின்படி, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் சம்பவம் நடந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் இது தொடரும்பட்சத்தில் அபராதம் அதிகரிக்கும். அல்லது நிறுவனத்தின் உரிமமும் ரத்து செய்யப்படலாம்.

இதேபோன்று வடகிழக்கு பகுதிகள் (மறுசீரமைப்பு) திருத்த மசோதா, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய திருத்த மசோதா ஆகியவையும் கடும் அமளிக்கிடையே நிறைவேற்றப்பட்டது.


நன்றி மாலைமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக