3 செப்., 2012

பள்ளி வாகனங்களுக்கு 11 புதிய விதி முறைகள்: ஐகோர்ட்டில், தமிழக அரசு தாக்கல்

சென்னை, செப்.3-

சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரில் சியோன் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த மாணவி சுருதி பள்ளிக்கூட பஸ்சில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து பலியானாள். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பொது மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோரை கொண்ட முதல் டிவிசன் பெஞ்ச், மாணவி சுருதி பலியானது தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து மேற்கொண்டது.

விபத்துக்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதோடு எதிர்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவங்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் சட்ட விதிகளை கடுமையாக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை வகுப்பதற்காக தமிழக அரசு கமிட்டி ஒன்றை அமைத்தது. அந்த கமிட்டி 11 விதிமுறைகளை வகுத்து தமிழக அரசிடம் தாக்கல் செய்தது. இந்த நிலையில் மாணவி சுருதி பலியான விபத்து வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை கொண்ட அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பித்தார். அதில் மாணவ- மாணவிகள் பாதுகாப்புக்காக எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் அந்த 11 புதிய விதிமுறைகளை படித்து பார்த்தார். பிறகு அவர் கூறுகையில், தமிழக அரசு வகுத்துள்ள இந்த விதிமுறைகள் சிறப்பாக உள்ளன. இந்த விதிமுறைகளை முறையாக செயல் படுத்தினால் எதிர்காலத்தில் துயர சம்பவங்களை தடுக்க முடியும். மேலும் மாணவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு ஒரு முன்மாதிரியாக திகழும் என்று பாராட்டினார். பிறகு அவர் இந்த வழக்கை பைசல் செய்து உத்தரவிட்டார்.

ஐகோர்ட்டில் இன்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளி வாகனங்களுக்கான 11 விதிமுறைகள் வருமாறு:-

1. தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதிகள் 2012 அரசு இதழில் வெளியிடப்படும். அது வெளியிடப்படும் நாள் முதல் உடனடியாக அமலுக்கு வரும். இது தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளி வாகனங்களுக்கும் பொருந்தும்.

2.மோட்டார் வாகன விதிப்படி அனைத்து பள்ளி வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்படும். உதவியாளர்கள், மாவட்ட குழு, பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி குழு, சிறப்புபடை ஆகியவை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

3.பள்ளிக்கூட பஸ்களை வேறு எந்த பயன்பாட்டுக்கும் பயன்படுத்தக்கூடாது. பள்ளி பேருந்துகள் முறையாக போக்குவரத்து துறையிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

4.பள்ளிக்கூட வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் முறைப்படி உரிய உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் அவர்கள் வாகனங்களை ஓட்டுவதில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். டிரைவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி தண்டனை பெற்றிருக்க கூடாது. கண்டிப்பாக அவர்கள் காக்கி உடை அணிந்திருக்க வேண்டும். அதில் டிரைவரின் பெயர் கொண்ட பேட்ஜ் அணிய வேண்டும். பள்ளி வாகனங்களுக்கான அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட அதிக வேகத்துடன் வாகனங்களை இயக்க கூடாது.

5.ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் கண்டிப்பாக உதவியாளர்கள் இருக்க வேண்டும். அவர்கள் அந்த வாகனத்திலேயே செல்ல வேண்டும். அவர்கள் கண்டக்டர்களுக்கு உரிய உரிமம் பெற்றிருக்க வேண்டும். உதவியாளர் பொறுப்பில் இருப்பவர்கள் 21 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் மாணவ-மாணவிகளை கையாள்வதற்கு போதுமான பயிற்சிகள் பெற்றிருக்க வேண்டும்.

பள்ளி குழந்தைகளை பஸ்சில் ஏற்றி வருவது முதல் மாலையில் மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக் கும்வரை உதவியாளர்கள் தகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும். மாணவிகள் மட்டுமே செல்லும் வாகனமாக இருக்கும் பட்சத்தில் அந்த வாகனங்களில் பெண் உதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

6.பள்ளி வாகனங்கள் சரியாக பராமரிக்க படவேண்டும். ஒவ்வொரு பள்ளி பேருந்தும் செமிசலூன் டைப்பாக இருக்க வேண்டும். டெம்போ வேன் போன்று இல்லாமல் வாகனங்கள் முழுமையாக மூடப்பட்டிருக்க வேண்டும். பள்ளி பேருந்துகள், வாகனங்கள் அனைத்துக்கும் மஞ்சள் வர்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும்.

தூரத்தில் இருந்து பார்க்கும்போதே இது பள்ளி வாகனம் என்று தெரியும் அளவுக்கு பெரிய அளவில் பள்ளியின் முத்திரை பொறிக்கப் பட்டிருக்க வேண்டும். மாணவ-மாணவிகள் ஏறி இறங்கும் கதவுகள் எளிதாக திறக்கும் வகையில், எளிதாக மூடும் வகையிலும் இருக்கிறதா- என்பதை தினமும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

7.பள்ளி பேருந்துகள் மற்றும் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றிச்செல்லக்கூடாது. ஒவ்வொரு பள்ளி வாகனங்களிலும் லாக் புக் பராமரிக்கப்பட வேண்டும். அந்த புத்தகத்தில் டிரைவர் தினமும் குறிப்பு எழுத வேண்டும். பஸ்சில் ஏதேனும் பழுதுகள் ஏற்பட்டிருந்தால் அதுபற்றி டிரைவர்கள் தவறாமல் லாக்புக்கில் எழுதி வைக்க வேண்டும்.

8.பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்வதற்கு சிறப்பு கமிட்டி அமைக்கப்படும். அந்த கமிட்டியில் பள்ளி நிர்வாகிகள், கல்வித் துறையினர், போலீசார், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், போக்குவரத்து அதிகாரிகள் இடம் பெறுவார்கள். இந்த கமிட்டி மாதந்தோறும் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்யும். இந்த கமிட்டியில் இருப்பவர்கள் டிரைவர்கள் குறிப்பு எழுதும் லாக் புத்தகத்தை வாங்கி சரிபார்க்க வேண்டும். அந்த புத்தகத்தில் பள்ளி பஸ்கள் பற்றி டிரைவர் ஏதேனும் குறிப்புகள் எழுதியிருந்தால் அதை பள்ளி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்து அதை சரிசெய்ய அறிவுறுத்த வேண்டும்.

9.மாவட்ட அஎளவிலும் கமிட்டிகள் அமைக்கப்பட்டு பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்படும். இந்த கமிட்டியில் வட்டார போக்குவரத்து அதிகாரி, போலீஸ் துணை சூப்பிரண்டு, மாவட்ட கல்வி அதிகாரி, மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள். இந்த கமிட்டி மாதம் ஒருதடவை கூடி பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்வார்கள். பள்ளி பேருந்துகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்கப்படுகிறதாப என்பதை உறுதி செய்வார்கள். இந்த கமிட்டியினர் பறக்கும் படையாகவும் செயல் படலாம். இதன் மூலம் பள்ளி பேருந்துகளில் செல்லும் மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்கா விட்டால் வட்டார போக்கு வரத்து அலுவலகத்துக்கு இது தொடர்பான தகவல்களை அனுப்பி கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய இந்த கமிட்டிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

10.பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சேர்ந்தவர்களும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய மாதம் ஒருதடவை கூடி ஆலோசிக்க வேண்டும். தங்கள் கருத்துக்களை மற்றும் புகார்களை அவர்கள் பள்ளி முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும். இந்த புகார்கள் பள்ளி கமிட்டிக்கு அனுப்பப்பட வேண்டும். பள்ளி கமிட்டி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கூறும் குறைகளை உடன்குடன் நிவர்த்தி செய்ய உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

11.பள்ளி வாகனங்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலத்தில் ஒரு கமிட்டி அமைக்கப்படும். மண்டல இணை போக்குவரத்து ஆணையர் தலைமையில் இந்த கமிட்டி செயல்படும். பள்ளி வாகனங்களின் தகுதி சான்றிதழ் குறித்து இந்த கமிட்டிதான் இனி முடிவு செய்யும்.

இவ்வாறு தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு வகுத்துள்ள 11 புதிய விதிமுறைகளுக்கு பெற்றோர்கள் சார்பில் இந்த வழக்கில் வாதாடிய வக்கீல் ஜார்ஜ்வில்லியம்ஸ் வரவேற்றார். அவர் கூறுகையில், பள்ளிக்கு வாகனங்களில் செல்லும் மாணவ-மாணவிகளின் பாதுகாப்புக்காக இந்த கோர்ட்டு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.
நன்றி மாலைமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக