13 ஜூன், 2012

மீண்டும் நில மோசடியில் முன்னாள் MLA கைது




மதுரை, ஜூன் 12: நிலப்பறிப்பு வழக்கில், மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான கோ.தளபதி உள்பட 4 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
 மதுரை அருகே உள்ள பசுமலையைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவர் ஆண்டாள்புரத்தில் முன்பு இருந்த மீனாட்சி மில்லில் பணிபுரிந்துள்ளார். அவருக்கு மூலக்கரை பகுதியில் வீடும், காலியிடமும் மானிய விலையில் மில் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டுள்ளது.
 2003-ல் மலைச்சாமி இறந்துவிட்டார். அவரது மகன் முருகேசன், மில் நிர்வாக அதிகாரி சீனிவாசனை சந்தித்து மலைச்சாமிக்கு வழங்கப்பட்ட வீடு, காலியிடம் தொடர்பாகப் பேசியுள்ளார். அவருக்கு ஒதுக்கப்பட்ட வீடு, காலியிடத்துக்கு மலைச்சாமி செலுத்திய தொகை போக, மீதிப் பணத்தை செலுத்த வேண்டும் என சீனிவாசன் கூறியுள்ளார். இதையடுத்து, வீட்டுக்காக ரூ.72 ஆயிரத்தையும், காலியிடத்துக்கு ரூ.52 ஆயிரத்தையும் முருகேசன் செலுத்தியதாகத் தெரிகிறது. ஆனால், பணம் செலுத்திய நிலையில் வீடு, காலியிடத்தை கிரயம் செய்து தரவில்லை. மேலும், திமுக மாநகர் மாவட்டச் செயலர் தளபதியை சந்திக்குமாறு, முருகேசனை சீனிவாசன் வற்புறுத்தியுள்ளார்.
 இதற்கிடையே, சம்பந்தப்பட்ட வீடு, காலியிடத்தை போலி ஆவணங்கள் மூலம் வேறொருவர் பெயருக்கு மாற்றியது தெரியவந்தது. இந்நிலையில், 2008-ல் தளபதி மற்றும் அவரைச் சார்ந்தோர் மலைச்சாமியின் வீட்டுக்குள் நுழைந்து, குடும்பத்தினரை மிரட்டினராம்.
 இதைத் தொடர்ந்து, தங்களது வீடு அபகரிக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் முருகேசன் வழக்குத் தொடர்ந்தார்.
 இதனால், தளபதி தரப்பினர் மீண்டும் முருகேசனை மிரட்டியதாக மதுரை ஊரக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வி. பாலகிருஷ்ணனிடம் புகார் அளிக்கப்பட்டது.
 இப்புகாரின்பேரில், மாவட்ட நிலப்பறிப்பு தடுப்பு பிரிவு போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
 விசாரணையில் நிலப்பறிப்பு குறித்த புகாரில் உண்மை இருப்பது தெரியவந்ததாலும், ரூ.10 லட்சம் மதிப்புடைய நிலத்தை அபகரித்ததாக புகார் எழுந்ததுடன், ரூ.15 கோடி மதிப்புடைய நிலங்களை அபகரித்து, போலி பத்திரம் தயாரித்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் போலீஸôர் தெரிவித்தனர்.
 இதைத் தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ தளபதி (57), வெங்கடேசன் (40), பசுமலையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (52), மலையரசன் (63) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
 மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் (எண் 1) ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அவர்கள் அனுப்பப்பட்டனர்.
 
உண்மையா பொய்யா களமும் காலமும் பதில் சொல்லட்டும்...



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக