18 ஜூன், 2012

அவசரச் சட்டம் தமிழ்நாட்டில் நிலவுகிறதோ? சுப.வீ. கண்டனம்!




37 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிக்கப்படாத அவசரச் சட்டம் தமிழ்நாட்டில் நிலவுகிறதோ? சுப.வீ. கண்டனம்!

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மறைந்த எழுத்தாளர், மூத்த பத்திரிகையாளர், சிறந்த திராவிட இயக்கச் சிந்தனையாளர் சின்னக் குத்தூசியாரின் முதலாண்டு நினைவுநாளையொட்டி, சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை நடத்திய நிகழ்ச்சிக்குப் பல்வேறு வகைகளிலும் தமிழக அரசு இடையூறுகளைக் கொடுத்திருக்கிறது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் அரங்கத்தில் கூட்டம் நடத்துவதற்கு முதலில் அனுமதி வழங்கிவிட்டு, பிறகு கடைசி நேரத்தில் அந்த அனுமதியைத் திரும்பப் பெற்றிருக்கிறது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், அனுமதி மறுக்கப்பட்டது நியாயமில்லை என்று தீர்ப்பு வழங்கியதோடு, கூட்டத்தை நடத்துவதற்கு உடனடியாக ஏற்பாடுகள் செய்துதர வேண்டும் என்றும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
நீதிமன்ற ஆணைகளையும் மதிக்காமல், விழா நடைபெற இருந்த அரங்கத்தைப் பூட்டிவிட்டு அதிகாரிகள் சென்றுள்ளனர். இச்செயல் நீதிமன்றத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாய் மக்களையே அவமதிக்கும் ஆணவச் செயலாôக உள்ளது. 37 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிக்கப்படாத அவசரச் சட்டம் தமிழ்நாட்டில் நிலவுகிறதோ என்னும் ஐயம் எழுந்துள்ளது.
தமிழக அரசின் நியாயமற்ற இப்போக்கினைத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.


நன்றி நக்கீரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக