11 அக்., 2012

பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.-மெயில் அனுப்பினால் 3 ஆண்டு சிறை: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

புதுடெல்லி, அக். 11-

பெண்களை ஆபாசமாக சித்தரித்து எஸ்.எம்.எஸ். மற்றும் மெயில் அனுப்பினால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. பெண்களை ஆபாசமாக சித்தரிப்போருக்கு தண்டனை வழங்கும் வகையில் கடந்த 1986ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. 

தற்போது நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட நிலையில், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். இ-மெயில் மூலம் ஆபாச படங்களை அனுப்பும் செயல் அதிகரித்துள்ளது. இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு பிரதமர் தலைமையிலான மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 

இதையடுத்து இந்த சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிகிறது. இந்த சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்தால், பெண்களுக்கு ஆபாச மெயில் அனுப்பும் குற்றச்செயலில் ஈடுபடும் நபருக்கு அதிகபட்சம் 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும். மேலும் முதல் முறையாக இக்குற்றத்தை செய்வோருக்கு குறைந்தபட்ச அபராதம் 2000 ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். ஒரு முறை தண்டனை பெற்று இரண்டாவது முறையும், இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டால் சிறைத்தண்டனை 7 ஆண்டுகளாக நீட்டிக்கப்படலாம். இதேபோல் அபராதம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை விதிக்கப்படலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக