29 ஆக., 2012

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்


தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

சிறுதி சுருதி உயிரிழந்த விவகாரத்தில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து புதிய விதிமுறைகளை உருவாக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு, இன்று தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலை யில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, புதிய விதிமுறைகளைத் தாக்கல் செய்ய ஏற் கனவே இரண்டு முறை கால அவகாசம் கேட்ட தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குறைஞர் நவநீத கிருஷ்ணன், மேலும் அவகாசம் கோரினார்.

அதற்கு, தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்னும் கூட வில்லை என்றும், அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி அதில் ஒப்புதல் வாங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

இதனைக் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பள்ளி வாகன பாதுகாப்பு விதிமுறைகளை உருவாக்குவதில் தமிழக அரசு அதிக மெத்தனம் காட்டுகிறது. எத்தனையோ விஷயங்களுக்கு அவசரமாக அமைச்சரவை கூடி விவாதிக்கும் போது, மிக முக்கியமான விஷயத்துக்கு ஏன் இதுவரை அமைச்சரவைக் கூடவில்லை. இது முக்கியமான விஷயமாக தமிழக அரசுக்குத் தெரியவில்லைய என்று கேள்வி எழுப்பினர்.

தற்போது உள்ள பிரச்னைகளிலேயே மிக முக்கியப் பிரச்னையாக இதனைக் கருதி, விரைவில் வரைவு விதிமுறைகள் அமைச்சரவையில் ஒப்புதல் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று வழக்குறைஞர் நவநீத கிருஷ்ணன் உறுதி அளித்தார்.

இதையடுத்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 3ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அன்றைய தினம் கட்டாயமாக வரைவு விதிமுறை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நன்றி நக்கீரன் 

1 கருத்து: