22 ஆக., 2012

அசாஞ்சை கைது செய்ய முயற்சிப்பது தற்கொலைக்கு சமம்: ஈக்வடார் அதிபர் ரபேல் எச்சரிக்கை



லண்டன்: "விக்கி லீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை கைது செய்யும் நோக்குடன், ஈக்வடார் தூதரகத்தில் லண்டன் போலீசார் நுழைய முயன்றால் அது தற்கொலைக்கு சமமாகும் என, ஈக்வடார் அதிபர் எச்சரித்துள்ளார்.
 
அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் உட்பட, பல்வேறு ரகசியங்களை, "விக்கி லீக்ஸ்' இணையதளத்தில் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியவர், ஜூலியன் அசாஞ்ச். இரண்டு பெண்களை கற்பழித்தது தொடர்பாக, சுவீடன் அரசு, இவர் மீது வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, அசாஞ்ச், பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார். சுவீடன் கோரிக்கை படி, இவர் கைது செய்யப்பட்டார். லண்டன் கோர்ட் இவருக்கு, ஜாமின் வழங்கியது. இதற்கிடையே, தங்கள் நாட்டிடம் ஒப்படைக்கும்படி, சுவீடன் கோரியது. இதை எதிர்த்து, அசாஞ்ச் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அசாஞ்சை சுவீடனிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அசாஞ்ச் மேல்முறையீடு செய்தார். ஆனால், இவரது மனுவை கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து, அசாஞ்சை கைது செய்து, சுவீடனிடம் ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்ப்பதற்காக அசாஞ்ச், லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டுத் தூதரகத்தில், கடந்த, ஜூன் 19ம் தேதி தஞ்சம் புகுந்தார்.


இதுகுறித்து, அசாஞ்ச், முன்னர் குறிப்பிடுகையில், "சுவீடனுக்கு என்னை நாடு கடத்தினால், அமெரிக்காவிடம் நான் ஒப்படைக்கப்படுவேன். அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டதற்காக, எனக்கு, அமெரிக்காவில் மரண தண்டனை அளிக்கப்படும் அபாயம் உள்ளது' என்றார். அசாஞ்சுக்கு தஞ்சம் அளிக்க, ஈக்வடார் அதிபர் ரபேல் கொரியா, தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். ஈக்வடார் அதிபர் ஒப்புதல் அளித்தாலும், லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தை விட்டு அசாஞ்ச் வெளியே வரும் போது அவர் கைது செய்யப்பட உள்ளார்.


இது குறித்து ஈக்வடார் அதிபர் ரபேல் கொரியா குறிப்பிடுகையில், "கைது செய்யாமல், பாதுகாப்பாக வெளியேற்றும் காலம் வரை, அசாஞ்ச், தொடர்ந்து தூதரகத்தில் தங்கியிருக்க லாம். அசாஞ்சை கைது செய்யும் நோக்கோடு, தூதரகத்துக்குள் லண்டன் போலீசார் நுழைந்தால் அது தற்கொலைக்கு ஒப்பாகும்' என்றார்.

நன்றி தினமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக