5 அக்., 2012

மோசடி வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி துரைதயாநிதி மனு: விசாரணை தள்ளிவைப்பு



துரைதயாநிதி மீது போடப்பட்ட கிரானைட் மோசடி வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில், துரைதயாநிதி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி சுந்தரேஷ் முன்பு வந்தது.

விசாரணையில் துரைதயாநிதி தரப்பில் வழக்கறிஞர் வீரகதிரவன் ஆஜராகி, இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துக்காக போடப்பட்ட பொய் வழக்கு. இந்த வழக்கில் புகார் கொடுக்க வேண்டியது கனிம வளத்துறை. அதற்கு மாறாக வருவாய் துறை அதிகாரியான விஏஓ ஒருவர் கொடுத்திருப்பது முரணானது. இந்த வழக்கில் நியமன பங்குதாரராக மட்டுமே மனுதாரர் இருந்தார். அதுவும் 2008ல் ராஜினாமா செய்துள்ளார். ஆக இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

மேலும் மனுதாரர் தரப்பில், விசாரணை என்ற பெயரில் போலீசார் குடும்ப உறுப்பினர்களை கெடுபிடி செய்கிறது. அதை நிறுத்த உத்தரவிடவேண்டும் என்றும் கூறப்பட்டது.

அரசு வழக்கறிஞர் செல்லப்பாண்டியனோ, விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கூடாது. மேலும் மனுதாரர் சம்மந்தப்பட்ட கம்பெனியில் மொத்தம் 11 பேர் குற்றவாளிகளாக இருக்கின்றனர். இதில் 2 பேரை தவிர மற்றவர்கள் அனைவரும் தலைமறைவாக இருக்கின்றனர். இந்த வழக்கில் மேலும் பலரை விசாரணை செய்ய வேண்டியிருப்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கூடாது. முறையாக சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறோம். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்களையும் அனுமதித்துள்ளோம் என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
=================================================
பொன்முடி முன்ஜாமீன் மனு மீது ஐகோர்ட்டில் தீர்ப்பு
சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மகன் கவுதம் சிகாமணி மற்றும் உறவினர் ராஜாமகேந்திரன் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், வானூர் தாசில்தார் கொடுத்த புகாரின் அடிப்படையில், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் எங்கள் மீது செம்மண் அள்ளியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சட்டத்தின் அடிப்படையில் உரிமம் பெற்றுள்ளதால் தாது பொருட்களை திருடியதாக குற்றம் சாட்ட முடியாது. அரசியல் காழ்ப்புணர்ச்சியில் தொடரப்பட்ட வழக்கு இது. எனவே எங்களுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.எம். அக்பர் அலி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அவர்களுக்கு முன்ஜாமீன் அளிக்க கூடாது அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனுக்கள் மீது 5-ந் தேதி (நாளை) தீர்ப்பளிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
நன்றி நக்கீரன் 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக