21 ஜூன், 2012

சிபிஎம் ஆதரவு - சிபிஐ புறக்கணிப்பு


ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் நிலை குறித்து முடிவெடுப்பதற்காக அக்கட்சிகளின் உயர்மட்ட தலைவர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி, ராமச்சந்திரன் பிள்ளை, ஏ.பி.பரதன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதா, வேண்டாமா என்பதுதான் இக்கூட்டத்தில் இடம்பெற்ற முக்கிய விவாதமாக இருந்தது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முக்கிய தலைவர்கள் ஏற்கனவே பிரகாஷ் காரத், பரதன் ஆகியோரிடம் பிரணாப்புக்கு ஆதரவு கோரியிருந்தனர். எனவே பிரணாப்பை ஆதரிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியது. அதிலும் மேற்குவங்க மாநிலத்தின் மார்க்சிஸ்ட் எம்.பி.க்கள் பிரணாப்பை ஆதரிப்பதில் பிடிவாதமாக இருந்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகள் பிரணாப்பை ஆதரிக்க எதிர்ப்பு தெரிவித்தன. எனவே இக்கூட்டத்தில் இடதுசாரி கட்சிகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இறுதியில் இடது சாரி கட்சிகள் தனித்தனியாக தங்கள் முடிவுகளை வெளியிட்டன. அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.

பிரணாப்புக்கோ, சங்மாவுக்கோ ஆதரவளிக்க தங்களுக்கு விருப்பமில்லை என இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா கூறினார். அதே போல் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியும் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. ஆனால் மற்றொரு முக்கிய கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் மேற்குவங்கத்தில் மம்தாவுக்கு எதிர்கட்சியாக விளங்கிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மம்தாவை எதிர்ப்பதற்காகவே தற்போது பிரணாப்பை ஆதரித்துள்ளதாக தெரிகிறது. மற்றொரு இடதுசாரி கட்சியான பார்வார்டு பிளாக் கட்சியும் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக