நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 செப்., 2012

சந்தனக்குடம்












கொடிகள் தெருக்களை 
அலங்கரிக்க...

மின்சார விளக்குகள் 
வழியெங்கும் வரவேற்க...

ஒலிபெருக்கியில் 
சினிமா பாடல் பாட ...

தெருவெங்கும் 
புதுக்கடையில் 
பிளாஸ்டிக் பொருளகள் 
இடம்பிடிக்க...

வீட்டுக்கு வீடு 
விருந்தாளிகள் 
வந்திருக்க...

தபஸ் குழுவினர்களுடன் 
சந்தனக்குடம் 
பவனி வர 
இளம் காளையர்களும் 
கூட்டமாய் சிரித்து 
எதையோ எதிர்ப்பார்த்து 
கண்கள் அலைப்பாய...

மறைந்து தான் போனது 
இருந்தாலும் 
மறக்காமல் தான் உள்ளது...





25 ஆக., 2012

ஞாபகம் ....


என் மகன் செயல்களில்
எனது இளம் 
வயது செயல்கள் 
எனது அம்மாவுக்கு 
ஞாபகமாய்   வந்து போகிறது...
--------------------------------------------
எனது மகனின் 
சின்ன சின்ன தவறுகளை 
கண்டிக்கும் பொழுது 
நீயும் அப்படிதான் செய்தாய் 
என்று சொல்லும் போது 
என்னை உணர்கிறேன்...
==========================
தினம் பூக்கும் நிலவு 
ஞாபகம் படுத்தும் 
அம்மாவின் உணவை...
======================

19 மே, 2012

ஈர்ப்பு...



காலைக் கதிர் 
வீசும் மார்கழி 
மாதத்து பனி.


காலைநேர தேநீர் 
உடன் பத்திரிகை.


தூக்கத்தோடு...
புதுக் கோலத்தோடு 
வந்து கோலம் போடும் 
இளசுகள்...
தெருவை அலங்கரிக்கும் 
கோலங்கள்!


தாயின் தாலாட்டு 
அப்பாவின் சிரிப்பு 


நண்பனின் அன்பு
நண்பர்களோடு அரட்டை...


அந்திப்பொழுது 
தூக்கம் மறுக்கும் இரவு,
தூண்மையான  உறவு ..


பாட்டி விற்கும் மாங்காய் 
காவேரிக் கரை குளியல் 


ஊர் டென்ட் தியேட்டரில் 
ஓடும் படம்.



மனைவின் அரவணைப்பு.
பிள்ளைகளின் உயர்வு 


பேரக்குழந்தைகளின் 
விளையாட்டு ...



இவை எல்லாமே 
ஒரு வித ஈர்ப்பு ...

2 மே, 2012

உறவுகளின் ஊமை வேடம்...



உறவுகள் இறைவன்
தந்த அற்புதத்தில் ஒன்று.

பாலைவனத்தில் 
தாகம் தீர்க்கும் 
தண்ணீராய் உறவுகள்.

ஊன்றுகோலாய் உதவும்
உறவுகளே...

காலத்தின் மாற்றத்தாலும் 
தலைமுறைகளின்
செயல்களால்...


தவறாய் மாறி
தட்டிக்கேட்கும் போது
தடுமாறும்...
நிலை மாறும்.

நரமில்லாத நாக்கு
ஆயுதமாய் போர் தொடுக்க
எதிர் அணியாய் உறவுகள்
இப்பொழுது...

அருகதையற்ற வாதங்கள்
 வாழ்ந்த அந்தக் 
காலத்தை எட்டி உதைக்கும்.


உறவு என்ற எண்ணத்தில்
கரையை போக்க
உண்மையை  சொன்னதால்,
தட்டிக்கேட்டதால்...


யார் இவன் என்னை
கேட்க என்ற முனங்கள்
முழக்கமாய் வரும்..


தட்டிக்கேட்டவன் நிலையோ 
பரிதாபம்.



தவறுகள் இங்கு மறுக்கப்பட்டு
மறைக்கப்பட்டு 
மனசாட்சிகள் கொன்றுவிட்டு 
நீதி வழங்கப்படுகிறது.

யாருக்காக இந்த நிலை 
முகம் காட்ட மறுக்கப்பட்டு 
பேச மறுக்கும்  உறவுகளே...

உண்மையை உணர 
இன்னொரு பிறவியா 
வேண்டும்....

கொஞ்சம் உணருங்கள்
உள்ளத்தில் கைவைத்து
கேளுங்கள்


காரணத்தை உணர்ந்தவார்களே 
இன்னும் எத்தனை நாளைக்கு ?
ஊமை வேடம்?


உண்மையின் ஊர்வலம்
வரும்போது உங்களை
உரித்துப்பார்க்கும்.


உறவுகள் மரணமாய்
உணர்வுகள் அற்ற ஜடமாய்..
என்னடா வாழ்க்கை இது ...


நேற்று வரை உறவு
என்று சொன்னதெல்லாம்
உண்மை என்றால் 
பிளவுக்கு பரிதுரைக்கும்
எண்ணம் ஏனோ?


எல்லாம் அறிந்த 
தெளிவில்லாத  உறவுகள்
இருந்தால் என்ன
விலகினால் என்ன
எல்லாம் ஒன்று தானே...

18 ஜன., 2012

பேருந்து நிறுத்தம்...


காதல் வாகனத்தை 
எதிர்ப்பார்த்து
விழிகளின் விசாரிப்பு 
ஆர்பரிக்கும் கூட்டத்தில்
நிலவுகளின் பங்களிப்பு 

பாவாடை 
தாவணியும்
சுடிதாரும் 
ஜீன்ஸ் 
டிஷர்ட் 
புடவைகளின்,
வண்ணமய  அணிவகுப்பு

பூமியாய் சுற்றி 
வரும் காளையர்களின் 
தவிப்புகளுடன் 

காலை நேர 
எங்கள் ஊர்
பேருந்து நிறுத்தம்...

16 ஜன., 2012

இல்லறம் நல்லறமானது!



வாழ்வில் வந்த வாசமலரே
வாழ்க்கை உந்தன் வசமானதே
வசந்தம் உந்தன் வருகையானதே
வளர்பிறையாய் வளர்ந்து போகுதே...

கண்ணே நீ தந்தது கோடி இன்பம்
கள்ளமில்லா வெள்ளை இதயம்
உலகம் வெல்லும் அன்பு கொண்டு-நீ 
என் இல்லறமாய் நாடி வந்த பூச்செண்டு!

மனமும் நல்ல குணமும்,சேர்ந்தே இருக்கும்
மணத்துடன் மனைவியாய் என் மனதிலிருக்கும்
கண்ணே!மணியே!என சொல்லி அழைக்கும்-உன் 
கடைக் கண் பார்வையோ என்னை ஈர்க்கும்...!

அழகிய சிரிப்பில் இல்லறம் நல்லறமானது
ஆற்றல் கொண்ட வாழ்வு உயிரே நீ தந்தது
அமைதியும் எனக்குள் வந்து அடங்கிப்போனது
அன்பே இதுவெல்லாம் உன்னால் வந்தது...!

8 ஜன., 2012

நட்புக்குள்ள வியப்பு...



பூக்களில் சிறந்த பூ 
நட்பு!
நட்பின் மொழி 
அன்போடு இணைப்பு.

நட்புக்கு இல்லை 
எதிர்பார்ப்பு .
காலம் போனாலும் 
நட்பின் நினைப்பு ...
பாசமாய் பிரதிபலிப்பு

நம்மோடு உறவாடும் 
உயிர்ப்பு நட்பு
நட்புக்கொண்டால் 
ஒரு ஈர்ப்பு.
உள்ளத்தை அறியும் 
வாய்ப்பு,

ஆண் .பெண் பாரத 
இணைப்பு...
உன்னத நட்பு 
உள்ளத்தின் பூரிப்பு 
நேசத்தின் உடன்பிறப்பு

நட்புக்குள்ள வியப்பு
நட்புக்கு மட்டுமே உகப்பு .
இதுவே நட்புக்கு சிறப்பு!

10 டிச., 2011

தேதி





நினைவுகளாய் மாறி 
ஒரு நாள் வாழ்கை 
கழிக்கப்பட்ட நிலையில் 
கிழிக்கப்பட்டது...



இன்று நான் 
உன்னோடு தான் 
இருப்பேன்...
மகிழ்வா இல்லை 
சோகமா உன் கையில் 


இன்றைய வாழ்கையை 
கைக்காட்டி 
கிழிக்கப்பட நிலையில் 
புதிய தேதி சிரித்தது.

5 டிச., 2011

புது வீடு...





அடுக்கி வைக்கப்பட்ட 
சிமென்ட் கோபுரத்தின் 
மூலையில்
எங்கள் மூளைக்கு 
கிடைத்த பரிசாய் 
புது வீடு...


நகரத்தின் மத்தியில் 
மரங்கள் இல்லாத 
நிலையில் வானத்தை 
பார்க்க...


அப்பா வந்தார் 
என்னடா இது 
வீடா இது...
வசைப்பாடினார்


அவரியின் பூர்வீக 
வீட்டை நினைத்த 
வண்ணம்...


என்ன சொல்லுவது 
அவரிடம் 
இதுக்கே 
நாங்கள் 
பட்ட கஷ்டத்தை...


எங்களுக்கு சரிப்பா 
உங்கள் விருப்படி 
இருக்காது 
சாரிப்பா 
என்று பதிலோடு 
நிற்க...


சொன்னார் 
எல்லாம் இருக்க 
நாங்கள் கட்டினோம் 
வீட்டை...


நீங்கள் கட்டி 
இனி வாங்கணும் 
காற்று உட்பட...


உண்மை 
உரைத்தாலும் 
உறுதியாய் 
உள்ளம்...


வாடகையை 
இல்லாமல்...
இருந்ததை 
தொலைத்து 
அலுவலகத்தில் 
லோன் எடுத்து...


நாங்கள் 
வாங்கிய வீடாய்
இருப்பதால் 
அமைதியாய்...


வீட்டியில் 
மட்டும் 
அழகுக்கு  செடிகளை 
வளர்க்க 
திட்டத்தோடு...

2 டிச., 2011

சிலா உறவுகள் அப்படித்தான்...





உறவுகள் அப்படித்தான்...
விரிசல்களை 
மறைத்துக் கொள்ளாமல் 
பேசியே கொல்லும்
சில 
உறவுகள் அப்படித்தான்...


வார்த்தைகளை 
கடை விரித்து 
ஏலம் போட்டு 
விலகிப்  போகும் 
மனமாய் 
உறவுகள் அப்படித்தான்...


சில உண்மைகள் 
கசக்கும் 
காரணங்கள் அறிந்தாலும் 
புரிந்தாலும் 
தெரியாத வண்ணமாய் 
நாடகமாடும் 
சில 
உறவுகள் அப்படித்தான்...


குற்றங்களை 
குறி வைத்து 
பார்த்து...
இல்லை தோண்டி எடுத்து 
குறை சொல்ல 
நாடும் சில 
உறவுகள் அப்படித்தான்...


அட போங்கடா 
தொப்புள் கொடி 
உறவே 
புரிந்துக் கொள்ளாத
போது
மற்ற உறவுகள் 
உணர்ந்தா போகும்...


உண்மை கசக்கும் 
உண்மையை 
சொன்னால்...


பத்தோடு ஒன்று 
அத்தோடு ஒன்றாய் 
போனால் சரி 


பிறந்து விட்டமே 
எப்படி போவது 
மனச் சாட்சி 
கேட்டால் 


பழிக்கு  பலியாகி 
உன்னையே குறை 
சொல்லும் 
சேராத தண்டவாளமாய் 
சிலா  
உறவுகள் அப்படித்தான்...

30 நவ., 2011

தொலைதூரக்காதலாய்

















மழையே கருவாய்
நிலைமாறிய

கவியாய்
மனதை மயக்கும் 
நிலையாய்
நிறம் மாறும்
மனம் விரும்பும்

மழையே விடலைப் 
பருவத்தின் 
தொலைதூரக்காதலாய் 
அணைத்துக்கொள்ளும்.


மழையா!
பள்ளிக்கு விடுமுறை 
மழையா!
காகித கப்பல் ஓட்டம்
மழையா 
சாரலோடு ஆட்டம் 
மழையா!
ஆனந்த ஆர்பாட்டம்

இளமை பருவத்தை 
இன்றும் நினைக்க 
இனிக்கும்...
தொலைதுராக் 
காதல் மழை

மண்ணுக்கும் 
மணக்கும் மலராய்
விதைக்கும்
விதைக்கு உயிராய்
எனக்கு உறவாய் 
இன்றும் மழையே
என் தொலைதூரக் 
காதலியாய்...

சிறு துளியோ 
பட்டால் சிலிர்க்கும்
மனதை மயக்கும்
நனைந்து சென்றால்   
இனிய இன்பத்தை
கொடுக்கும்...

இந்த மழையோ
மலைக்குள் 
அருவியாய்
எனக்குள்
உணர்வாய் 
உருமாறி 

என்றும் 
காதல் பேசும் 
மழையே 
தொலைதூரக்காதலாய் 

25 நவ., 2011

அம்மா...





அம்மா!
ஆயிரம் சொந்தங்கள் 
வந்தாலும் 
உனக்கு நிகர் 
யார் அம்மா!


ஒவ்வொரு 
முறையும் 
நான் உன்னை 
பார்க்கும் போதும் 
பாசத்தோடு 
அணைக்கும் 
நிகழ்வுக்கு  
ஈடு ஏதம்மா .


நான் வருகிறேன் 
என்றாலே 
சிறு குழந்தையாய் 
நீ மாறுவாய்...


முடியாத நிலையிலும் 
முண்டியடித்து 
நீ சமைப்பாய்...


வேண்டாம் 
என்றாலும் 
கேட்கவா போறாய்


வகைக்கு ஒன்னு 
வேலைக்கு ஒன்னு 
என சமைத்து தான் 
முடிப்பாய் 


போதும் போதும் 
என சொன்னாலும் 
இன்னும் கொஞ்சம் 
என்று 
கொஞ்சியே 
வயிறு முட்ட
உண்ண வைப்பாய்..


நான் வளர்ந்து 
போனாலும் 
இன்னும் குழந்தையாய் 
எண்ணி ஊட்டி தான் 
விடுவாய் 

உன்னோடு நான் 
இருந்த ஒவ்வொரு 
வினாடிகளும் 
குழந்தையாய் தான் 
மாறிப்போவேன்...

நேற்று 
உன்னை விட்டு 
வந்த பின் 
உன்னோடு 
இருந்த நாட்களை 
நினைத்தப்படி...


அடுத்த விடுமுறை 
வரைக்கும் 
உன் நினைவுகள் 
சுமந்தபடி...

19 நவ., 2011

வண்ணங்கள்



காதலின் வண்ணம்
கவிதைகள்!

வெற்றின் வண்ணம்
நேற்றைய தோல்வி !

மனதின் வண்ணம்
நிம்மதி!

தாயின் வண்ணம்
பிரசவத்தில்!



மனைவியின் வண்ணம்
இல்லறத்தில்!

அரசியல்வாதின் வண்ணம்
தேர்தல் நேரத்தில் .

ஏமாளிகளின் வண்ணம்
அவசரத்தில்!


ஈகையின் வண்ணம்
கொடுப்பதில்!

நேற்றிய வண்ணம் 
நினைவுகளில் 

இன்றைய வண்ணம் 
இனிமையில் 

நாளைய வண்ணம் 
எதிர்ப்பார்ப்பில் 

எனது வண்ணம்
எண்ணியதை கவியாய் சொல்வதில்.

=================================



உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

17 நவ., 2011

மீண்டும் மிதிவண்டி எடுப்போம்...







நாம் 
மதித்து வந்த
மிதிவண்டி இன்று
ஓரங்கட்டப்பட்டது...


நல்ல தலைவர்கள் 
நடிகை முன்
தேர்தலில் 
தோற்றது போல

அக்கறையும்
அவசியமும் 
உடலுக்குள்
அடைக்கலம்
அறிந்தும் 
அலட்சியம்.

இயற்கை தந்த பரிசு 
ஓடாமல் 
ஒரே இடத்தில் 

கொழுப்புக்கள் 
கரைக்க  மட்டும்
பயன்படும்
பின் ஓரத்தில் ஒதுங்கும் .


சொந்த 
தொழிலுக்கு உறவாக்கி...
புதிய தொழிலை 
உருவாக்கி...
வாழ்வுக்கு உரமானது
இன்று ஓரமானது.

இளமைக்கு 
மீண்டும் மிதிவண்டி
பக்கம் நீ திருப்பு...

மீதமுள்ள வாழ்வை 
விரும்பி
இளமைக்கு இதை 
நம்பி 
மீதிவண்டியை 
மீண்டும்
தெருக்களில் ஓட்டி பழகு ...

எரிபொருளின் விலையை 
அறிந்து...
உன் நிலையை உணர்ந்து 
ஓட்டி வந்தால்
உன் உடலுக்கு அழகு
வருவதை பாரு...

இயற்கையோடு 
நீ மோதி 
மாசுபடாமல் 
ஒரு நகர்வலம்...
மீண்டும் மிதிவண்டி 
எடுத்து ஊர்வலம்...

உடல் நலம் சிறக்க
கூட்டத்தை குறைக்க
மீண்டும் நாம் 
மிதிவண்டியை எடுப்போம்...

மீதி உள்ள வாழ்க்கையை 
விதி மீறாமல் கடப்போம் 
உடல் நலம் காப்போம்!

===========================================

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

15 நவ., 2011

உங்களுடன்! எனது முந்நூறு....


எனது தளத்தில் படையல் முந்நூறு 


ஒப்பனை அறைக்குள் 
புது அவதாரமாய் 
கவிதைகள்.



வெண்பாக்களும்,
மரபுகளும் 
கொஞ்சம் தள்ளி 
வைக்கப்பட்டு 


புதுபொலிவோடு 
புதுக்கவிதை 
ஊர்வலம்.


அவசர உலகத்தில் 
டெஸ்ட் டிப்
குழந்தையாய் 
கருவின் பிரசவம்.


எளிய நடைகளுடன் 
எள்ளிய நடைகளின் 
சமூகப்பார்வை...


இணையத்தில் 
இதயங்களை வெல்ல 
தமிழர்களின் 
போராட்டம்...


இவர்களில் நானும் 
ஒருவன்....
உங்களுடன்!


=============================================


உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

13 நவ., 2011

காரம் ..........

உறவுகள் 
கசந்துபோனால் 
இனிப்பான
நிகழ்வுகளும் 
மறந்து போகிறது.


விபரம்  அறிந்து 
விடை சொன்னால் 
விபரிதமே உறவுக்குள்.


காரணம் 
காரசாரமாய் 
மாறினால்...


குழம்பில் மட்டுமா 
காரம் ..........



சில உறவுகளின் 
வார்த்தைகளும் 
நாக்கிலும்.


=========================================================

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

9 நவ., 2011

பயண முடிவுக்கு...















நாளைய தலைமுறையின் 
வாழ்க்கைக்காக 


எங்கள் வாழ்க்கையை 
தொலைக்கவே 
பாலைவனம் வந்தோம் 


இன்பத்தை தொலைத்து 
குடும்பத்தை மறந்து 
பாசத்தை இழந்து 
வாங்கப்பட்டன 
பணம்!



நாளைய தேவைக்கு 
இன்று சேமிக்க 
விற்கப்பட்டன 
இளமை...


மரண செய்தியை 
கேட்டு மரமாய்...
நடமாடும் கல்லாய்


உறவுகளின் திருமணமா 
வீடியோவில்...


செய்திகள் பரிமாற்றம் 
தொலைபேசியில்...


தண்ணீரை சேமிக்கும் 
ஒட்டகத்தை போல 


விடுமுறைக்காக 
கனவு காண்பதிலும் 


விடுமுறைக்காக 
காத்திருப்பதில் தான் 
காலமே ஓட்டம் 




திரும்பி பார்த்தால் 
முடி நரை  சொல்லும் 


இன்னும் எங்கள் முறை 
வரவில்லை 
ஊரில் வாழ...


காத்திருக்கிறோம் 
முதுமையோடு 


பயண 
முடிவுக்கு...





உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

4 நவ., 2011

நினைவுகளை சுவாசித்து...




வாலிப வயதின்
பெருநாள் என்றால்
மனதுக்குள்
மகிழ்ச்சி வெள்ளோட்டம்.


ஊரெல்லாம்  
கொண்டாட்டம்.

பெருநாள்
முதல் நாள்
மாலை வந்து விட்டால்
மனசுக்குள்
மத்தாப்பாய் சந்தோசம்

மருதாணி இலைக்கு
அலைப் பாயும்
பெண்கள் கூட்டம்.


துணிப்பை நிறைய
மருதாணி இலைகள்
நிரப்பட்டு ஆனதமாய்
நடைப்பழகும்.

இரவு...
தெருவெங்கும்
ஒரு பரபரப்பு

வண்ண விளக்கின்
வெளிச்சம்
தெருவுக்கு 
போர்த்தப்படும்

வண்ணக்கொடிகள் 
பந்தலாய் கட்டப்படும்

ஒலிப் பெருக்கில்
நாகூர் ஹனிபா
பாடிக்கொண்டு இருப்பார் .

பெண்கள் கைகளில்
மருதாணி கோலம்.

தாயிக்கும் மகளுக்கும்
மறுநாள் காலை உணவு
பற்றி 
கருத்துப் பரிமாற்றம்.

எதுவும் அறியாமல்
வரவு சிலவு கணக்கோடு
அப்பாக்கள்.

நாளைய திரைப்படத்துக்கு
போவது பற்றி
வாலிபர்கள் திட்டம்.

இரவு உறங்க சொல்ல
சூரியன் விழித்துக்கொள்ள
பெருநாள்.

புது சட்டை
கைலியோடு இனம்புரியாத
சந்தோஷத்துடன்
தொழுகைக்கு
ஆயத்தம்.



நண்பர்கள் படைச் சூழ
சிரிப்பின் சில்லறைகளை 
முகத்துக்குள் வழங்கப்படும் .

தெருவெங்கும் 
வாலிபக் கன்னிகளின் 
தேரோட்டம்

நேரம் செல்ல செல்ல
பெருநாள் கைவிட்டு
போவது போல...
கவலை மனதுக்குள்.

சூரியன் நிறமாறும்
மாலை நேரம் 

பெருநாள் 
மெல்ல மெல்ல
செல்லுவதை
அறிந்தாலும் 

திரைப்படத்தின் நாட்டம்
கொஞ்சம் மாற்றும்.

பெருநாள்!
இரவோடு செல்ல...

மனமும்
அடுத்த பெருநாளுக்கு
ஏங்க...

வாலிபத்தில் பண்டிகை
கேளிக்கையையும்
மகிழ்ச்சியையும் சார்ந்தே
இருந்தது.

அவசர உலகத்தில்
இந்த நினைவுகளை
சற்று சுவாசித்து

பாலைவனத்திலிருக்கும்
நானும்...
மீண்டும் பார்க்கிறேன்...

பூர்வீக வீடு.



மனதுக்குள் இன்னும்
அழிந்து போகாமல்
பாசமாய் பசுமையாய்
வாழ்ந்த காலத்தை
காட்சியாய் ஓடும்
பூர்வீக வீடு.


இதோ இந்த
புதுத் தெருவில் தானே
முன்னோர்களின்
முகவரி இருந்தது.


உறவுகளும்
சொந்தங்களும்,
கூடிய கூடு.


பாசப் பறவைகள்
இறந்துபோனதால்
எல்லாம் மாறித்தானே
போனது.


வறுமை வலைவிரிக்க
வீடும் கை மாற
இன்று நிறமாறி
குலமாறிதனே இருக்கு.


ஓட்டு வீடு.
பெரிய திண்ணையும்
திண்ணையின்
இடதுப்பக்கம்
சாய்வாய் அமர
சிமென்ட் சிமாசனம்.


இங்கு தானே
நான் உட்கர்ந்து இருந்தேன்.
உறவுகளுடன்,
நண்பர்களுடன் பேசி சிரித்தேன்.


தேக்கு மர தூண்கள்
வீட்டை தாங்கி நிற்கும்
பார்க்கும் போதே ஈர்க்கும்.


வாசக்கதவுகள் .
இரும்புக்கோட்டையாய்
வீட்டைக்கக்காக்கும்.
இதை நான் பூட்டி
பார்த்ததில்லை.


மிதிவண்டியை
இருசக்கர
வாகனத்தை நிற்க
இடம்.


அடுத்து ஒரு கதவு,
பாதுக்காப்புக்கு.


அடுத்து பெரிய
வாசல் ,
இன்று இதுக்குள்ள
வீடு கட்டும் நிலை.


மழைக்காலத்தில் 
காகிதக் கப்பல் 
இங்கு தானே விட்டேன்.

வாசல் ஓரத்தில் 
படுத்துவிட்டால் போதும் 
காற்றை மின்சாரமூலம் 
கடன் வாங்க வேண்டாம்.

தென்றல் வந்து 
கொஞ்சும்,
தூக்கம் கண்ணுக்குள் வந்து 
கெஞ்சும்.


இதை ஒட்டி கூடம் ,
விருந்து என்றால்
ஒரு தடவை
முந்நூறு பேர்
அமர்ந்து சாப்பிடலாமே.


இரண்டு அறைகள்,
கூடத்தை ஒட்டி.


அடுத்து சாமன்கள்
வைக்க அறை என


ஒவ்வொரு அறைகளும்
இன்று வாடகை வீடாய்
இருப்பதை கூறலாம்.


சமையல் செய்கிற போது
காற்றுக்கு பஞ்சமில்லை.
சமையலறை இன்று
போல் குறிகிய இடமாயில்லை.


பெரிய நீர் தொட்டி
ஒரு தடவை நிரப்பிவிட்டால்
தண்ணீருக்கு 
பஞ்சம் வந்ததேயில்லை.


இன்னும் சொல்லலாம்,
எங்கள் பூர்வீக வீட்டை


நினைக்கும் போதும்
சொல்லும் போதும்
கண்ணும் கலங்கும்
எனக்கு...


எல்லாம் இன்னும்
மனதுக்குள்...
எங்கள் வீடோ
இன்று மண்ணுக்குள்.


இருந்தாலும்
மனதில் இன்னும் படமாய்
இருக்க
நினைவுகளோடு 
இன்றும் 
படமாய் ஓடிக்கொண்டு தான்
இருக்கு.

3 நவ., 2011

தன் வலைக்குள்

இவளை பார்க்கும் 
போதெல்லாம் 
ஒரு வித ஈர்ப்பு

தொட்டுப் பார்த்து 
தட்டிப் பார்ப்பதும் 
எனது வழக்கம்.

இவளை அடைய 
ஒரு ஆசை 
வருமானமோ 
போதவில்லை.

சேமிப்புக் கணக்கில் 
வரவுவைத்து 
இவள் வரவுக்கு 
காத்திருந்தேன் .

அந்த நாளும் வந்தது 
பேரம் பேசி 
ஒரு 
விலை பேசி,
முடித்து விட்டேன்.

மனதுக்குள் ஆனந்தம் 
நோகமால் எடுத்துவந்தேன்
இன்று!

தனிமை 
இரவுக்குள் இருக்க 
பதட்டத்தோடு 
என் மடிக்குள் 
வைத்து 
மேலாடையை 
அவிழ்த்தேன் ...

கருப்பு நிற வைரமாய் 
அங்கம் சிரிக்க 
விரித்தேன் 
அவள் மேனியை ....

மின்சாரத்தொடு 
தொடர்புக் கொடுத்து 
இயக்கினேன் அவளை 

விண்டோஸ் 7  என்று 
சிரித்த  முகமாய் 
தன் வலைக்குள் 
என்னை இணைத்தாள்.

இந்த மடிக் கணினி!